மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, மதுரையில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பு இரண்டு குழந்தைகளை கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக கூறி, போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர். இரண்டு குழந்தைகளும் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை எந்தவித அனுமதியும் இல்லாமல் முதியோர்கள் மற்றும் குழந்தைகளை அடைத்து வைத்திருந்த தகவலும் தற்போது கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதயம் அறக்கட்டளையின் உரிமையாளர் சிவக்குமார் சில அதிகாரிகளின் துணையுடன் போலி ஆவணங்கள் தயார் செய்ததும் அவ்வாறு தயார் செய்த ஆவணத்தின் மூலம் கடந்த ஆண்டுகளில் முதலமைச்சர் விருது பெற்ற செய்தியும் தெரியவந்துள்ளது. அதன்மூலமே குழந்தைகள் இறந்ததாகவும் ஆவணங்களை தயார் செய்து உள்ளார். மேலும் இந்த வழக்கில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதன் உரிமையாளர் சிவகுமார் தப்பி ஓடி விட்டார். எனவே இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து உள்ளார்.







