பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 18 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான போரட்டத்தில் வன்முறை வெடித்து பெரும் கலவர பூமியாக மாறி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ கைது செய்யப்பட்டார்.
இடதுசாரி கொள்கைகளை கொண்டவரான பெட்ரோ காஸ்டிலோ கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பெருவின் அதிபரானார். எதிர் கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இரண்டு முறை தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். இரண்டு முறையும் தப்பித்த பெட்ரோ காஸ்டிலோவை மூன்றாவது முறை அதிரடியாக எதிர் கட்சியினர் தகுதி நீக்கம் செய்தனர்.
இதன் பின்னர் புதிய அதிபராக பொறுப்பேற்ற டினா பொலுவார்டே கடந்த ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளை செய்ததாக பெட்ரோ காஸ்டிலோவை கைது செய்தார். இந்த கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வீதியில் வந்து போரடத் தொடங்கினர். இதற்கு எதிராக ஆளும் வலதுசாரி கட்சியின் அதிபரான டினா பொலுவார்டேவின் ஆதரவாளர்களும் போரட்டத்தில் குதித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதனையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். மேலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்தது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை ஒடுக்கினர்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 18 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 12 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் நிலவும் அசாதாரன சூழலை கட்டுக்குள் கொண்டு வர இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 3 நாட்களுக்கு உள்ளூர் நேரப்படி, இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







