சென்னை மெரினா கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து, அதனை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. சில நிபந்தனைகளும் விதித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு முன்பாக ஐ.என்.எஸ் கடற்படை தளத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும், பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளுக்காக எந்த நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது என்றும், திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைத்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : மாணவர்கள் கல்வி கண்கட்சிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! – இபிஎஸ் அறிவுரை
கட்டுமானக் கழிவுகளை நீர்நிலைக்கு அருகே கொட்டக்கூடாது என்றும், கடல் ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜனவரி 1-ம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பேனா நினைவுச் சின்னப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது கொடுத்திருக்கும் அனுமதி பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்பது உள்ளிட்ட மொத்தம் 15 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.