“தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள்!” – நயினார் நாகேந்திரன்

தவெக அரசு மெத்தனப் போக்கை விடுத்துப் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதும், கிராமம், நகரம் எனப் பாரபட்சமின்றி கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான, தொடர் மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. பகல், இரவு பாராமல் ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறைக்கு மேல் ஏற்படும் மின்வெட்டால் தமிழக மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாகப் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே மின்சார விநியோகத்தைக்கூட முறையாக நிர்வகிக்க முடியாமல் தத்தளிக்கிறது தவெக அரசு.

இந்தக் கடுமையான மின்வெட்டால் முதியவர்களும் பச்சிளம் குழந்தைகளும் இரவு முழுவதும் தூங்க இயலாமல் கண்விழித்துக் கதறும் கொடுமை அரங்கேறி வருகிறது. குறுவைச் சாகுபடிக்கான பாசனத்திற்கும், அன்றாடக் குடிநீர்த் தேவைக்கும்கூட மின்மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகளும், பொதுமக்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஆனால், மின்சாரத் தட்டுப்பாடு இல்லை என்று குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து வெற்று அறிக்கை விடும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, கள எதார்த்தத்தை வசதியாக மூடி மறைக்கிறது. தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை சரிசெய்ய இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? வழக்கமாகவே கோடைக் காலங்களில் மின் தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகும்; அப்படி இருக்கையில், வரவிருக்கும் கோடைக் காலத்தை எதிர்கொள்ள என்ன திட்டங்களை வைத்துள்ளது இந்த தவெக அரசு?

ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே மக்களை இருளில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசு, உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி அறப்போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.