திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து பராமரிப்பு பணிகள் முடிந்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் தடம்புரண்டது.
திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள், அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதே போல் பயணிகள் மாவட்டங்களை இணைக்கும் பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட பல ரயில்கள் இயக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் திருச்சி பயணிகள் ரயில் ஒன்று இன்று மாலை பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் வந்த போது ரயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனை அறிந்த ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. ரயில் தடம் புரண்டதால் குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் பூங்குடி பகுதியில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1.30 மணி நேரம் போராடி பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். பின்னர் ரயில் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. தண்டவாளம் சீர் செய்யப்பட்டதை தொடர்ந்து ஒன்றரை மணி நேர தாமதத்திற்கு பிறகு குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி புறப்பட்டது.
அதே போல திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும் பாசஞ்சர் ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.