மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சீர்காழியில் மட்டும் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டு மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கினர்.
இந்த நிலையில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







