36 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

கொங்குவை குறிவைக்கும் கட்சிகள் – மக்கள் யார் பக்கம் ?


ஜோ மகேஸ்வரன்

கட்டுரையாளர்

வரும் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை தக்க வைக்க திமுகவும் அதைத் தட்டிப் பறித்து விட அதிமுக மற்றும் பாஜகவும் வியூகம் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி என்ன முக்கியத்துவம் இந்த பகுதிக்கு…? பார்க்கலாம்…

கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைக் கொண்டு பகுதிகள் கொங்கு மண்டலம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 10க்கு பத்து இடங்களையும் சேலம் மாவட்டத்தில் 11க்கு 10 இடங்களையும் தருமபுரி மாவட்டத்தில் 5க்கு 5 இடங்களையும் அதிமுக கூட்டணி வென்றது. மாறாக கரூர் மாவட்டத்தில் 4க்கு 4 தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது. நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆறுதலான இடங்களுடன் கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு மொத்தம் 24 தொகுதிகள் கிடைத்தன.

அதேநேரத்தில் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணியே பெற்றது. ஆனாலும் 2024ம் ஆண்டும் அனைத்து தொகுதிகளையும் மீண்டும் வெல்ல வேண்டும். தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் கொங்குவை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக, கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகப் பிரமுகர்களை திமுகவில் சேர்ப்பது, அரசு நலத்திட்டங்களை அதிகம் கொண்டு சேர்த்து, மக்களை ஈர்ப்பது என்று வியூகம் வகுத்துள்ளது. இதற்கு கைமேல் பலனாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியே அதிக இடங்களைப் பிடித்தது.

அதிமுகவிற்கு இது பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதையடுத்து, 2019ல் விட்டதை 2024ல் பிடித்து விட வேண்டும் என்று அதிமுக…குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முயற்சித்து வருகிறது. உட்கட்சிப் பிரச்னைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் கொங்கு மண்டலத்தில் நாங்கதான் எப்பவும் வெயிட்டு என்று தங்கள் இருப்பை நிருபிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் மட்டுமல்ல, கொங்கு மாவட்டங்களிலும் தனக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அங்கு ஒரு கண் வைத்துள்ளார் என்கிறார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியோ தனித்தோ எப்படி இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி மக்களவைத் தொகுதிகளை தன்வசப்படுத்த பாரதிய ஜனதா கட்சி களமிறங்கி விட்டது. குறிப்பாக, நீலகிரியில் மத்திய அமைச்சர் எல்,முருகன், கோவையில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அண்மையில் தேர்தல் சுற்றுப் பயணத்தை, கோவையில் தொடங்கினார். இந்த ரெண்டு தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டத்தை நடத்தியதையும் குறிப்பிட்டு சொல்கிறார்கள் அக்கட்சியினர்.

கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட 8 தொகுதிகளையும் மீண்டும் வென்றாக வேண்டும் என்று திமுக கூட்டணி நினைக்கிறது. அதைத் தட்டிப் பறித்துவிட வேண்டும் என்று அதிமுக, பாஜக திட்டமிடுகின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கடந்த தேர்தல்களில் மக்களவைக்கு திமுக கூட்டணிக்கும் சட்டப்பேரவைக்கு அதிமுக கூட்டணிக்கும் இடங்களை தந்த கொங்கு மண்டலம்… வரும் 2024ல் என்ன செய்யப் போகிறது….? தலைவர்களின் முயற்சி பலிக்குமா…?

இதுகுறித்த முழு வீடியோவைக் காண :

கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் கட்சிகள் | Sol Therinthu Sol | Dmk | Admk | Bjp | Kongu | Politics
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading