நீட் முறைகேடு விவகாரம்: மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…

நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,  சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.  ஜூன் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை)  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில்,  குடியரசுத் தலைவர்…

நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,  சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். 

ஜூன் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை)  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில்,  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்புரையாற்றினார்.  இதையடுத்து நடைபெற்ற அமர்வுகள், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து , 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடி உள்ளது.

கூட்டம் தொடங்கியதும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கல் செய்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, நீட்  முறைகேடு  மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க  கோரி காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர். காங்கிரஸ் எம்பிக்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இன்று விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர்.

அதேபோல், நாடு முழுவதும் இன்றுமுதல் அமலாகியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். இருப்பினும், நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,  சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.