பரந்துர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கிய நிலையில், விமான நிலையம் அமைக்க பரந்தூர் உள்பட சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, 3வது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம். தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர் எனவும், 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலையம் எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றை 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சமாளிக்கப் போதுமானதாக இருக்கும் எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு, “தொழில்துறை வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதே அவர்களது கருத்தாக இருந்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக இங்கிருந்து அனுப்ப வேண்டிய சரக்குகள் பெங்களூர் விமான நிலையத்துக்கு மாறியுள்ளன. அதேபோல ஹைதராபாத் விமான நிலையமும் தமிழக வாய்ப்புகளை தட்டிப் பறித்துள்ளது. இவ்விரு விமான நிலையங்களின் ஆண்டு வளர்ச்சி 17 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சென்னை விமான நிலையம் பின்தங்கியதற்குக் காரணம் புதிய விமான நிலையத்தை உருவாக்காததே ஆகும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “சென்னை நகரிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கான பயண தூரம் அதிகபட்சம் 54 நிமிடமாக உள்ளது. அதுவே பரந்தூராக இருப்பின் 73 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்ற கருத்தை புறந்தள்ள முடியாது. இதற்காக மெட்ரோ ரயில் தடமும் விரிவுபடுத்தப்படும். அப்போது பயண நேரம் 1 மணி நேரமாகக் குறையும்.
அனைத்துக்கும் மேலாக சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும்போது தொழில்துறையினருக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகும்; வேலை வாய்ப்புகள் பெருகும்.தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்” என்று கூறியுள்ளது.