பரமக்குடி ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரிய பூமரக்கால் நேர்த்திக்கடன் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று வசந்தபுரம் தேவேந்திரகுல வேளாளர் மண்டகப்படி அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 57 ஆம் ஆண்டாக வசந்தபுரம் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பு சார்பில் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி முன்புறம் செல்ல, அலங்கரிக்கப்பட்ட மரக்காலில் நெல்களை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவத்தின் போது பக்தா்கள் அக்னி சட்டி எடுத்தும், வேல் குத்தியும், கரும்பாலை தொட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்சார தேரில் கோவிலிருந்து பூப்பல்லாக்கில் அம்பாள் எழுந்தருளி நகர் வீதி உலா செல்லும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றி இழுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னா் மூலவராக வீற்றிருக்கும் முத்தாலபரமேஸ்வரி அம்பாளுக்கு விஷேச தீபாராதனையும் நடை பெற்றது. இவ்விழாவில் பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.