பனங்காட்டு படை கட்சி 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில ஆலோசகர் பாலசிவநேசன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆனைக்குடியில் உள்ள பனங்காட்டு படை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
நாடார் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பனங்காட்டு படை கட்சியின் ஆலோசகர் பாலசிவநேசன், தங்கள் கட்சி 45 முதல் 50 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக கூறினார். எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் நாடார் சமூகத்தினரின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.







