தமிழ்நாட்டில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தைப்பூச திருவிழாவின் கடைசி நாளான இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை 9.30மணியளவில் கோயில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6-ம் நாள் திருவிழாவான பிப்ரவரி 3-ம் தேதி மாலை நடைபெற்றது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித் தேரோட்டமும், பிப்ரவரி 4-ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற்றது.
இதனையடுத்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பிறகு உச்சி கால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சண்முக விலாஸ் மண்டபத்தில் வைத்து சுவாமி அஸ்திர தேவருக்கு பால் , தயிர் , சந்தணம், இளநீர், மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகையான சிறப்பு அபிசேகமும், தீபாராதனையும் காட்டப்பட்டது.
இந்த நிலையில் பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழா கடைசி நாளான இன்றுடன் நிறைவடைகிறது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 4-ம் தேதி நடந்து முடிந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று மாலை தெப்பத்தேர் பவனி நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவு கொடியிறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவைடைகிறது. தைப்பூசத் திருவிழா நிறைவு நாளான இன்று பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காவடிகள் சுமந்து கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- பி. ஜேம்ஸ் லிசா