பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.
பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிடக் கோரி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அரசு தரப்பில், முருகன் தமிழ் கடவுள் ஆவார் என்றும், அதனால் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனிநபரும், அரசாங்கத்திற்கு கருத்து கூற வேண்டியது இல்லை என்றும் விளக்கமளித்தது. மேலும் தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலைய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.