சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்

கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உலக ஓவிய தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல்…

கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உலக ஓவிய தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கத்திலும், ஓவியப்பயிற்சி முகாம்கள், ஓவியக் கலைக்காட்சிகளை நடத்திட அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மண்டல அளவில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு மண்டல கலை பண்பாட்டு மையங்கள் மூலம் ஜவகர் சிறுவர் மன்றங்களில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்ட உள்ளது. ​அதன்படி, , சென்னை, அரசு கவின் கலைக்கல்லூரி, வளாகத்தில் 16.07.2022 அன்று நடைபெறும் ஓவியப்பயிற்சி முகாமில் பென்சில் ஓவியம், வாட்டர் கலர் பெயிண்டிங், ஆயில் கலர் பெயிண்டிங் & அக்ரலிக் பெயிண்டிங், பேப்ரிக் பெயிண்டிங் மற்றும் கண்ணாடி ஓவியம் ஆகிய 5 ஓவியக் கலைப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகத் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘செங்கல்பட்டு சாலை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு’

மேலும், ஒரு கலைப் பிரிவிற்கு 30 முதல் 60 மாணவ, மாணவியர் வீதம் 300 மாணவ, மாணவியருக்குப் பயிற்சி வழங்கப்படும் எனவும், இப்பயிற்சி முகாமில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை கலைப்பயிற்சி அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில், 11.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மாணாக்கர்கள் கலைப் படைப்புகளை உருவாக்கி, 3.00 மணி முதல் 4.00 மணி வரை மாணக்கர்களின் கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, கலைக்காட்சி 4.00 மணிக்குப் பார்வையாளர்களுக்குத் திறந்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஓவியப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களுக்குப் பயிற்சிக்குத் தேவையான பொருட்களும், பங்கேற்புக்கான சான்றிதழும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 150 மாணக்கர்களும், வெளி பள்ளியில் பயிலும் 150 மாணாக்கர்கள் என மொத்தம் 300 மாணாக்கர்கள் ஓவியப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஏதுவாக, மாணக்கர்களின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் மற்றும் கலந்து கொள்ளும் கலைப்பிரிவு ஆகிய விவரங்களைக் கலை பண்பாட்டுத்துறை, ஜவகர் சிறுவர் மன்ற தொலைப்பேசி எண்ணிற்கு 044 – 28192152 தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.