பஹல்காம் தாக்குதல் சம்பவம் – பாகிஸ்தான் தலைநகரில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட மத்திய அரசு முடிவு?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில் தமிழர்கள் மூவர் உட்பட பலர் காயமடைந்தனர். தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சைளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு – காஷ்மீர் அரசு 10 லட்சம் நிதி அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சம்பவம் அறிந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பாதியில் நாடு திரும்பினார். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி பிறகு, சம்பவம் நடந்த இடத்தை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இச்சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்,  இரங்கல் தெரிவித்து, பாகிஸ்தானுக்கும் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தொடர்பில்லை என கூறினார். இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.