தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.
கலை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, பொது விவகாரங்கள், குடிமைப்பணி மற்றும் சமூகப்பணி, போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சென்று பல்வேறு இடங்களில் பாம்புகளை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக அமெரிக்காவின் புளோரிடா மாகாண உயிரியல் பூங்காவில் சுற்றித்திரிந்த மலைப்பாம்புகளை பிடித்து கொடுத்து அமெரிக்க அரசுக்கு 2017 ஆம் ஆண்டு உதவியுள்ளார்கள். அமெரிக்காவில் இரண்டு மாத காலம் வரையில் தங்கியிருந்து, 33 பர்மீஸ் ரக மலைப்பாம்புகளை பிடித்தவர்கள்.







