நாடு முழுவதும் இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய சோதனையில், BIS சான்றிதழ் இல்லாத 18,000க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தைகளில் மலிவான, தரமற்ற பொருட்களின் விற்பனையைத் தடுக்க, பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை 2020ன் கீழ், ஜனவரி 2021ஆம் ஆண்டு, இறக்குமதி செய்யப்பட்ட, தயாரிக்கப்பட்ட, விற்கப்பட்ட, சேமிக்கப்பட்ட அல்லது விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து பொம்மைகளுக்கும் BIS சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும், 25 விற்பனை நிலையங்களில், இந்திய தர நிர்ணய ஆணையம் சோதனை நடத்தியது. அந்த சோதனையில், BIS சான்றிதழ் இல்லாமல் பொம்மைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து 18,000க்கும் மேற்பட்ட BIS சான்றிதழ் இல்லாத பொம்மைகளை இந்திய தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய தர நிர்ணய ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ”BIS சான்றிதழ் இல்லாத பொம்மைகளை விற்கும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக இந்திய தர நிர்ணய ஆணையத்தால் நாடு தழுவிய அமலாக்க இயக்கம் நடத்தப்பட்டது. 25 விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏராளமான பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று பதிவிட்டுள்ளது.
BIS சான்றிதழ் இல்லாத பொம்மைகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (சிசிபிஏ) தலைவர் நிதி கரே தெரிவித்துள்ளார். மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாத பெரும்பாலான பொம்மைகள் ISI முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய தர நிர்ணய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
BIS சான்றிதழ் இல்லாத பொம்மைகளை விற்பனை செய்வதாக உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து புகார்களைப் பெற்றதையடுத்து, கடந்த மாதத்தில் 44 சோதனைகளை நடத்தி, நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மற்றும் மால்களில் அமைந்துள்ள ஹேம்லிஸ், ஆர்ச்சிஸ், டபிள்யூஎச் ஸ்மித், கிட்ஸ் சோன் மற்றும் கோகோகார்ட் உள்ளிட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து 18,600 பொம்மைகளை பறிமுதல் செய்ததாக BIS இயக்குநர் பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார்.




