ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை தங்களது போராட்டம் ஓயாது என பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் மாயவன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான டி.என்.எஸ்.இ ஜாக்டோ (TNSE – JACTO) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 20 – க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த ஆரப்ட்டத்தை நடத்தின.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு பணிக்காலத்தை (seniority) மட்டுமே தேவையான தகுதியாக கருத வேண்டும், டெட் (TET) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனும் விதிமுறையை தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பள்ளிக்கல்வி துறையில் அரசு மட்டும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் அந்தந்த பள்ளிகளிலேயே உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பதை பிரதான கோரிக்கைகளாக முன் வைத்துள்ளனர்.
அதேபோல உயர்கல்வி தகுதிக்கு வழங்கிய ஊக்க ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் தொகுப்பூதிய ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காலியாக இருக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20-ற்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆரபட்டததில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் மாயவன் கூறியதாவது;
பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இரண்டு நாட்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் மேல் ஆகியும் தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்த இவர்களுக்கு அருகதை இல்லை. அண்ணா, கருணாநிதி ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை தடுத்து வைத்துள்ளீர்கள்.
அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவது கோரிக்கைகளை நிறைவேற்ற அல்ல, போராட்டங்களை ஒத்திவைக்க தான் . பள்ளிக்கல்வித்துறையில் எல்லாவற்றிலும் பகுதி நேர ஆசிரியர்களை அமல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேசி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று அவராகவே கூறும் வரையில் தொடர்ந்து எங்களது போராட்டம் ஓயாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









