தமிழ்நாட்டில் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர்களுக்கு 25,000 அரசு வேலைகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் இன்றைய தலையாயத் தேவை என்ன என்பதை உணர்ந்து, அதை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை என்று குறிப்பிட்ட அவர்,
பஞ்சாப் மாநில தேர்தல் தேர்தல் பரப்புரையின் போது முதன்மையாக முன்வைக்கப்பட்ட வாக்குறுதி, படித்த இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; அதற்காக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன், காலியிடங்களும் நிரப்பப்படும் என்பது தான். அதை ஏற்கும் வகையில்தான் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு அம்மாநில மக்கள் வரலாறு காணாத வெற்றியை அளித்திருக்கிறார்கள். தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக 25,000 அரசு வேலைகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, பஞ்சாப் மாநில அரசின் இந்த நடவடிக்கைகள் துணிச்சலானவை. பஞ்சாப் அரசு வெளிப்படுத்தியிருக்கும் அதே துணிச்சலை தமிழக அரசும் வெளிப்படுத்தி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது தான் தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு. பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான தேவை மிகவும் அதிகமாகவே உள்ளது. வேலை வழங்குவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் பஞ்சாபை விட தமிழக அரசிடம் அதிகமாக உள்ளன. ஆட்சிக்கு வந்தால், அரசுத்துறைகளில் காலியாகவுள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்திருந்ததால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்று தெரிவித்தார்
எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் முடக்கி வைக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்புதல் என நடப்பாண்டில் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







