டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 11, 2025) நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இது குறித்து தனது X தளப் பக்கத்தில் விஜய், “கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் நான் பேசியபோது, நம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் (Free and Fair Election) என்று வலியுறுத்தியிருந்தேன்.

அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.” என்று குறிப்பிட்டார்.

மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஏற்கனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.