திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எழுவர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். முன்னதாக திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறை தண்டனை அனுபவித்து வரும் எழுவர் விடுதலை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எழுவர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி 124 நாட்கள் ஆன நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது பொதுமக்களிடையே மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு, புதிய ஆளுநருக்கு அழுத்தம் தரமுடியாது என்ற சட்டத்துறை அமைச்சரின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளதாக என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
எனவே, முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, திமுக எம்பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எழுவர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.