வாராந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற 2-வது முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனால், தமிழ்நாட்டில் இருப்பில் இருந்த தடுப்பூசிகள் அனைத்தும் காலியாகும் நிலை ஏற்பட்டது. வரும் வாரங்களில் தொடர்ச்சியாக மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதால், தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருவதால், வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாக தடுப்பூசி செலுத்தும் வகையில் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.







