ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தடுக்கும் விதமாக ஆன்லைன் விளையாட்டு பற்றிய கருத்துக்களைப் பகிர விரும்பும் பொதுமக்கள் homesesi@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான அவசரச் சட்டம் குறித்த பரிந்துரைகளை ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு ஜூன் 27 ஆம் தேதி அளித்தது. அதில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம், ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கைவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை அளித்திருந்தது.
அதன் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகத் தலைமைச்செயலாளர் இறையன்பு, ஆலோசனை மேற்கொண்டிருந்தார். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், அரசியல் தலைவர்களிடம் உள்துறைச்செயலாளரும் கருத்துக்களைக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.