அமெரிக்காவில் மேலும் ஒரு தமிழக பழங்கால சிலை இருப்பது கண்டுபிடிப்பு

12-ம் நூற்றாண்டை சேர்ந்த் பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.   கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஐந்து பஞ்சலோக சிலைகளில் பார்வதி சிலையும்…

12-ம் நூற்றாண்டை சேர்ந்த் பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 

கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஐந்து பஞ்சலோக சிலைகளில் பார்வதி சிலையும் ஒன்று. 1971 ஆம் ஆண்டு இந்த சிலைகள் காணாமல் போனதாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இந்த விவகாரம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு வாசு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 53 வருடத்திற்கு பிறகு பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

அமெரிக்காவில் போன்ஹாம்ஸ் என்ற ஏலம் நடைபெறும் இல்லத்தில் பார்வதி சிலை இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை தமிழ்நாடு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.


நடனபுரீஸ்வரர் கோவில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலம் ஆகும். கயிலாயத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்ற போது திருக்கல்யாணத்தை காண தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வந்தனர். இதனால் வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. பூமி தேவியின் பாரத்தை சமம் செய்வதற்காக சிவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார்.

 

சிவன், பார்வதி திருக்கல்யாணத்தை காண முடியாமல் மனம் வருந்திய அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தருவதாக அருள் பாலித்தார். அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள நடனபுரீஸ்வரர் திருக்கோவிலில் அகத்திய முனிவரின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் கார்த்தியாயனி கல்யாணசுந்தரராய் அகத்தியருக்கு காட்சித்தந்து அருளினார் என்பது இந்த கோவிலின் தல வரலாறு.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.