தெலுங்கானாவில் குரங்கம்மை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை வைரசானது இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட 79க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இதையடுத்து குரங்கம்மை வைரஸ் நோய் பரவலை சர்வதேச நோய் தொற்று பரவலாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 14ம் தேதி கேரளாவை சேர்ந்த ஒருவர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேருக்கு இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், டெல்லியிலும் ஒருவருக்கு நேற்று குரங்கம்மை பாதிப்பு உறுதியானது. அதனைத்தொடர்ந்து அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், டெல்லியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.








