சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில், அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழில் கவிதை எழுதி பயணிகள் முன் விமானி பிரிய விக்னேஷ் வாசித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு உள்ளே பறக்கும் விமானங்களில் கூட தமிழில் அறிவிப்புகள் செய்யப்படுவது இல்லையே என்ற ஆதங்கம் இருந்து வந்த நேரத்தில் தான், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில் தமிழில் அறிவிக்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதிலும் குறிப்பாக, “இன்னும் 10 நிமிடங்களில் உங்களுக்கு வலதுபுறமாக காவிரி ஆறு கொள்ளிடமாகவும், காவிரியாகவும் பிரிந்து இரு வேறு ஆறுகளாக ஓடுவதைப் பார்க்கலாம். நடுவில் ஶ்ரீரங்கம் கோயில் இருப்பதையும் நீங்கள் பார்க்க முடியும்” என்று அறிவித்த அந்த வீடியோ இன்றும் பலரது நினைவுகளில் இருந்து அகலாத ஒன்றாக இருந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த காணொளியில் தன் தமிழ் அறிவிப்பின் வாயிலாக பலரை கவர்ந்த அந்த விமானி தான் பிரிய விக்னேஷ். தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சிறு வயதிலிருந்தே விமானி ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது போலவே, விமானத்தில் தமிழில் அறிவிப்புகளை கூற வேண்டும் என்ற ஆசையும் விக்னேஷின் கனவாக இருந்திருக்கிறது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, பல போராட்டங்களுக்கு பிறகு விமானியானதன் மூலம் இவரது முதல் கனவு நனவானதை போலவே, மிக விரைவிலேயே தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற ஆசையும் இவருக்கு கைக்கூடியது.
இதற்கு இவருடன் இருந்த சஞ்சீவ் என்ற வட இந்திய விமானியும், தமிழில் அறிவிப்புகளை வெளியிட ஊக்கப்படுத்தியதோடு, இண்டிகோ நிறுவனமும் ஒத்துழைப்புத் தரவே, தமிழில்
அறிவிப்புளை வெளியிட்டு பிரபலமடைந்தார் பிரிய விக்னேஷ். அந்த வரிசையில் நேற்று உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழில் கவிதை ஒன்றை எழுதி பயணிகள் முன் வாசித்த விமானி பிரிய விக்னேஷ், தற்போது பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
அதிலும் குறிப்பாக அந்த காலம் தொட்டு இன்று வரை நாம் பார்க்கக் கூடிய சினிமாவை சார்ந்த நிழல் அம்மாக்களையும், நம்மோடே பயணித்து வரும் நிஜ அம்மாக்களையும் தொடர்புப்படுத்தி அவர் வாசித்த அந்த கவிதை பலரது கவனத்தையும் பெற்றதோடு, தற்போது சமூகவலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா