ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்டத்…

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திர போராட்டத் தலைவர்கள், வீரர்கள், தியாகிகளின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களின் போது மட்டுமே, அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை செய்யப்படும் நடைமுறை, ஆண்டுடாண்டு காலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு தலைவரின் சிலைக்கும் அரசின் சார்பாக, தினசரி மாலையிடும் வழக்கம் இல்லை.

வருங்காலங்களில் ஜெயலலிதா வளாகத்தில் (தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை மன்ற வளாகம்) நிறுவப்பட்டுள்ள அவர் சிலைக்கு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெயலலிதா சிலையினை அதிமுக சார்பில் பாராமரிப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடம் பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் வழங்கிடும் நடைமுறையில்லாத நிலையில், ஜெயலலிதாவின் சிலை அரசின் சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.