ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் மாநகரப் பகுதிகளுக்குள் இயங்கி வருகின்றன.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு, சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், தனியார் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் எனவும் மீறினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அறிவித்தது.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல மாநகரப் பகுதிக்குள் இயக்கப்பட்டு வருகிறது. தை பூசம் , குடியரசு தினம் என அடுத்தடுத்து விடுமுறைகள் வரவிருக்கும் நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், சென்னை புறநகரில் முடிச்சூர் பகுதியில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க போதிய இட வசதி அளிக்கும் வரை தொடர்ந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசின் அறிவிப்புகளையும் தாண்டி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.







