அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சில தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19ம் தேதி முதல் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முதுநிலை பயிற்சி மாணவர்கள், அவர்கள் பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் இந்த கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய இலவச பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் வரை மாணவர்களை அனுமதிக்குமாறு அனைத்து நடத்துநர்களுக்கும், போக்குவரத்துத்துறை சென்னை மண்டல துணை மேலாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.








