நீட் விவகாரத்தில் சுய நலத்திற்காக ஓபிஎஸ் – இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள் என திராவிடர் கழக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நடைபெற்ற நீட் தேர்வு விலக்கு பரப்புரையை தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட கருத்தியலின் உயிர் வடிவமாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியை பார்ப்பதாக கூறினார்.
திராவிட சிந்தனை நாடு முழுவதும் பரவியிருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக்குறிப்பிட்ட அவர், கருப்பையும் சிவப்பையும் எந்த கும்பலாலும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
நீட் மட்டுமல்ல, எந்த நுழைவுத்தேர்வும் எந்த வகையிலும் நுழையக் கூடாது என்பதே அரசின் கொள்கை என திட்டவட்டமாக கூறிய அவர், மக்களை விட ஆளுநர் அதிகாரம் மிக்கவர் என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அண்மைச் செய்தி: ‘துணைவேந்தர் நியமனத்தில் குழப்பம் வேண்டாம்: தேமுதிக’
கடந்த ஆட்சியின் போது, தங்களின் சுய நலத்திற்காக ஓபிஎஸ், இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள் என்றும் அவர் விமர்சித்தார். முன்னதாக பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசிய கல்வி கொள்கையின் மூலமாக, இனி கல்வி பயில இந்திதான் ஒரே மொழி என்ற நிலை ஏற்பட்டிருப்பதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய கி.வீரமணி, ஒரு பக்கம் தொழில் வளர்ச்சி, மற்றொரு பக்கம் தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாடு என முதலமைச்சர் செயல்பட்டு கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை சர்வதேச பன்னாட்டு தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









