துணைவேந்தர் நியமனத்தில் இந்தியா முழுவதும் என்ன நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறை தமிழ்நாட்டிலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நல்லது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை பல்கலைகழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலை கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்படும் சட்ட திருத்த மசோதா சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதை உடனே மாற்றுவது என்பது இலகுவானது அல்ல. இந்தியா முழுவதும் என்ன நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறை தமிழ்நாட்டிலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நல்லது. எனவே துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்பவர்களை தவிர்த்து, ஊழல் இல்லாத நேர்மனையான துணை வேந்தர்களை நியமித்தால் மட்டுமே, பல்கலைகழகங்களும், மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








