“அவர்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப்போவது இல்லை” என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழ்நாடு திரும்பிய சசிகலா ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் சென்றார். அதிமுக கொடியுடன் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணித்த சசிகலா, ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், “அவர்கள் நினைப்பது போல் ஒன்றும் நடக்கப்போவது இல்லை” என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மாலை முரசு அதிபராக இருந்து மறைந்த பா.ராமசந்திர ஆதித்தனாரின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் மாலை முரசு சென்னை அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “ நினைவிடங்களுக்கு சசிகலா செல்வதால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. என்னதான் பில்டப் கொடுத்தாலும் அது செயற்கையான பில்டப், இயற்கையானதாக இருக்காது.
அவர்கள் நினைப்பது போல் ஒன்றுமே நடக்கப்போவது இல்லை. அதிமுக யானை போல் பலம் பெற்றது. கொசு யானைமேல் உட்கார்ந்து, நான்தான் தாங்கிக்கொள்கிறேன் என கூறுவது எள்ளி நகையாட வைக்கும். கட்சி கொடியை பயன்படுத்த தார்மீக உரிமை கிடையாது. இது சம்பந்தமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சி கொடியை பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும். ஈரைப்பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது நடக்காது. அரசியலில் சசிகலாவிற்கு டிடிவி தினகரன் அமமுகவில் இடம் கொடுக்கலாம். ஆனால், அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லை.
நிராகரிக்கப்பட்ட சக்திகள் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை கைப்பற்ற நினைப்பது பகல் கனவாகத்தான் இருக்கும். சத்தியம் பண்ணட்டும், கண் கலங்கட்டும் எங்களுக்கென்ன? சிறந்த ஆஸ்கருக்கான நடிப்பு நடித்தாலும் மக்கள் அவார்டு கொடுக்க மாட்டாங்க.” என்று சசிகலாவின் இன்றைய பயணம் குறித்து விமர்சித்துள்ளார். மேலும்,
“துப்பாக்கி முனை கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.” என்றும் விமர்சித்துள்ளார்.
Advertisement: