தமிழ்நாட்டில் கடந்த 2021 ஜனவரி முதல் தற்போது வரை 3,187 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் டீன் ரத்தினவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் கொரோனா குறைந்து கொண்டே வருகிறது. சென்னை, கோவையில் மட்டுமே 100க்கும் மேலாக கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு மருத்துவமனை திகழ்கிறது. மதுரை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 23 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைய உள்ளன.” என்று கூறினார். மேலும்,
“டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2021 ஜனவரி முதல் இதுவரை 3,187 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்த சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல தண்ணீரை தேங்க வைக்க கூடாது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கண் முன்னே இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது கொள்கை ரீதியான முடிவு. இந்த முடிவுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதேபோல மதுரை அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் 70 முதல் 75 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விழாக்கள் மூலமாக தமிழகத்தில் கொரோனா பரவுகிறது. மக்கள் கவன குறைவாக இருக்க வேண்டாம் . தடுப்பூசி குறித்த சந்தேகங்களை மக்கள் 104 என்கிற எண்ணில் கேட்கலாம். 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும். இவர்களுக்கான தடுப்பூசி தொழில்நுட்ப ஆய்வில் உள்ளது.” என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






