அமைதிக்கான நோபல் பரிசு: சிறையில் வாடும் ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அறிவிப்பு!

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம்…

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நார்வே நோபல் அமைப்பு முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நர்கிஸ் முகம்மதியின் துணிச்சலான போராட்டம் அவரது சொந்த வாழ்வில் மிகப்பெரிய துயரங்களுடன்தான் நிகழ்ந்திருக்கிறது.

ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். ஐந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறை தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். துயரம் என்னவென்றால், நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.  ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையல் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை (அக்.9) அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.