காங்கிரஸ் கட்சியில் 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கபடக்கூடாது, நான்கு முறைக்கு மேல் ஒருவர் தேர்தலில் நிற்க சீட் வழங்க கூடாது, காங்கிரஸ் கட்சியின் முகமாக ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் குறித்து உதய்பூரில் இன்று தொடங்கவுள்ள காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்தியில் மோடி தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை எப்படி கரை சேர்க்கலாம் என்பது குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் ஓர் அறிக்கையை கொடுத்தார். அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸில் தாம் இணைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை சோனியாவிடம் சமர்பித்தது. அதில் பிரசாந்த் கிஷோரின் பல கோரிக்கைகள் ஏற்புடையதாக இல்லை எனக் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவை திரும்ப பெற்றுக்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் உதய்பூரில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு ’நவ் சங்கல்ப் சிவிர்’ என்ற சிந்தனை அமர்வு-2022 நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் 75 வயதை தாண்டிய மூத்தோர்களுக்கு எவ்வித பதவியும் வழங்க கூடாது எனவும், நான்கு முறைக்கு மேல் ஒருவர் தேர்தலில் நிற்க சீட் வழங்க கூடாது எனவும், இளைஞர்களை கவர எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என விவாதிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு மாநில வாரியாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் இந்த சிந்தனை அமர்வில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ராகுல் காந்தியை காங்கிரசின் முகமாக முன்னிறுத்த வேண்டும் என காங்கிரசில் உள்ள இளைய தலைமுறையினர் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உதய்பூர் சென்றுவிட்டனர். இதில் எடுக்கப்படும் முடிவுகள், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை பற்றி மட்டும் இல்லாமல், பாஜகவிற்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இராமானுஜம்.கி