தமிழகத்தில் மின் தடை என்று அச்சம் கொள்ள தேவையில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ 5,085 கோடி நிலுவை வைத்துள்ளதாகவும், அதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ 1,381 கோடியும், அதற்கு அடுத்ததாக தமிழ்நாடு ரூ.926 கோடி நிலுவை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அதனால் 13 மாநிலங்களும் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்தில், மத்திய அரசின் மின் தொகுப்பிற்கு தமிழக அரசு சார்பில் செலுத்த வேண்டிய பாக்கி ரூ.70 கோடி மட்டுமே உள்ளது. அது ஓரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும். மத்திய அரசின் போர்டலில் சரிவர வரவு வைக்கப்படாத காரணத்தால் நிலுவை அதிகமாக காட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தடை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை” என்று கூறியுள்ளார்.








