கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழாவிற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீனு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும்,கோயில் திருவிழாக்களில் சட்ட-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்பிருந்தாலோ, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதுமானது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதால் சட்ட-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறிய நீதிபதி, திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.







