ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ, அதைவிட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சாட்டை துரைமுருகன், தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுதாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசியல் தலைவர்களை அவதூறாக விமர்சிக்கமாட்டேன் என மனுதாரர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த நிலையில், முதலமைச்சர் குறித்து தரக்குறைவாக விமர்சித்துள்ளதால் அவரது ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.
#JUSTIN |
முதலமைச்சருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பாராட்டு https://t.co/WciCN2AH8n | #mkstalingovt | @CMOTamilnadu | #highcourt | @mkstalin | #News7TamilUpdates | #news7tamil pic.twitter.com/oshRyfsTXl
— News7 Tamil (@news7tamil) December 9, 2021
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு முதலமைச்சராக எவ்வளவு முடியுமோ, அதைவிட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார் என பாராட்டினார். மேலும், முதலமைச்சரை பாராட்டாவிட்டாலும், இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம் என குறிப்பிட்ட நீதிபதி, முதலமைச்சர் குறித்து சாட்டை துரைமுருகன் மீண்டும் அவதூறாக பேசியதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறும் வகையில் செயல்பட்டிருந்தால், மனுதாரரின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.