கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது.
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ரெம்டெசிவிர் மருந்து, , ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர், வெண்டிலேட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், கொரோனா பரிசோதனை கருவி உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படும்.
மேலும் சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படும். ஆம்புலன்ஸ் 28 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்படும்.
தடுப்பூசிகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசு 75 சதவிகிதம் தடுப்பூசிகளை வாங்கும்போது அதற்கான ஜிஎஸ்டி வரி செலுத்தப்படும் . அதில் இருந்து கிடைக்கும் 70 சதவிகிதம் வருமானம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் . இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பேட்டியின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் உடனிருந்தார்.







