போதை பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உள்ளிட்டோர், சதி செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த அக்.3ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலை யில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு ஆர்யன் கான், அவர் நண்பர்கள் அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தமேசா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போதைப் பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை என்றும் வாட்ஸ் ஆப் உரையாடலில் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் ஏதுமில்லை என்றும் ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்தால் மட்டும் ஆரியன் கானை போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புபடுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.