சவுதி அரேபியா சென்ற தங்களது தம்பியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்.
இவர் கடந்த 2005ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். மூன்றாண்டு காலம் வரை கடிதத்தின் மூலமாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தாருடன் எந்த வித தொடர்பிலும் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பழனிவேலை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த முகவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்காததால் அவரது சகோதரிகள் செய்வதறியாது திகைத்தனர். தங்களின் தம்பியின் நிலை குறித்து யாரிடம் சொல்வது என்ற விவரம் அறியாமல் அவர்கள் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சவுதியில் பழனிவேலை பார்த்ததாக நண்பர் ஒருவர் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து வெளிநாட்டில் உள்ள தங்களின் தம்பியை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிவேலின் சகோதரி பழனியம்மாள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு ஒன்றை அளித்துள்ளார்.