“கோயில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை எனும் இடத்தில் மகாமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாசி திருவிழா நடத்தக் கோரி பாரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, குறிப்பிட்ட சாதியினர், தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதால், அறநிலையத் துறை தரப்பில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால் அறநிலையத் துறையே விழாவை நடத்தும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படுவதாக அறிவிப்பு.! - News7 Tamil

ஆண்டுதோறும் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டு திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாதி என்பது மதமல்ல என ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது எனவும் அதை மற்ற பிரிவினர் தடுக்க கூடாது எனக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், “கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது” எனத் தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.