தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மணிப்பூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கை முடங்கியது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இதை “சிறப்பு அமர்வு” என்று விவரித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், தற்போதைய மக்களவையின் 13வது அமர்வு என்றும், மாநிலங்களவையின் 261வது அமர்வு என்றும் அரசு பின்னர் தெளிவுபடுத்தியது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவும் இந்த அமர்வின் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லாத சில புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா பற்றிய பேச்சுக்களும் உலா வருகின்றன.
மே 28 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு நாடாளுமன்றம் மாற்றப்படுவதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாடாளுமன்ற பல்வேறு துறை ஊழியர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கூட்டத்தொடரின் முதல் நாளில் சம்விதான் சபையில் தொடங்கி 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் பயணம் குறித்த சிறப்பு விவாதத்தை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டத்திற்கு தற்போது வரை அழைப்பு வரவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..
“ தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை தங்களுக்கு அழைப்பு வரவில்லை. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர முடியாது என கர்நாடகா அரசு சொல்வது சட்ட விரோதம். சட்டப் போராட்டம் மூலமோ பேச்சுவார்த்தை நடத்தியோ காவிரி நீரை தமிழ்நாடு அரசு பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.







