வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, ரொக்கப்பணம், சொகுசு கார், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இறுதித் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்டால் நிரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் என்றும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என இந்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.







