தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, பழனி உளிட்ட 10 பகுதிகளை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு உடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதோடு, இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமிழகத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகளில், தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை திருவொற்றியூர் வசித்து வரும் அப்துல் ரசாக் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் சோதனை நடைபெற்று வந்த நிலையில், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அப்துல் ரசாக்கை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், பழனி நேதாஜி நகரை சேர்ந்த 50 வயதுடைய முகமது கைசர் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். முகமது கைசர் பிஎப்ஐ அமைப்பின் மதுரை மண்டல தலைவராக செயல்பட்டு வந்தவர். இந்த சோதனையை தொடர்ந்து, முகமது கைசரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. முகமது கைசர் வீட்டில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதமும் என்ஐஏ சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், மதுரை நெல்பேட்டை பகுதியில் வசித்து வரும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ், வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அப்பாஸை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் SDPI அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் சாதிக் அலி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட PFI அமைப்பில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
பழனி நேதாஜி நகர் பகுதியில் வசிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தென்மண்டல செயலாளர் முகமது கைசரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து முகமது கைசரை அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.
அதேபோல் சார்ஜாவில் இருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தஞ்சையை சேர்ந்த முகமது அசாப் என்பவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா