ஐபிஎல் யின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டியளித்தார்.
திருவாரூரில் நடைபெற்ற ’மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிஇஓ காசி விஸ்வநாதன்:
தமிழ்நாடு வீரர்கள் குறைவாக இந்திய அணியில் ஆடுகிறார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. டெஸ்ட் மேட்சில் அஸ்வின் மற்றும் விஜய் இருக்கிறார்கள். ஒன் டே மேட்சில் தினேஷ் மற்றும் கார்த்திக் அஸ்வின் இருக்கிறார்கள். அடுத்து சாய் கிஷோர் ஆடவிருக்கிறார். நிறைய தமிழக வீரர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வாஷிங்டன் சுந்தரம், விஜய் சங்கர் ஆகியோர் காயம் பட்டுள்ளார்கள். முன்பு மாதிரி மும்பையில் இருந்து ஏழு பேர் பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது. இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள். டிஎன்பிஎல்-யில் இருந்து 13 பேர் ஐபிஎல்-யில் சென்று விளையாடுகிறார்கள்.
அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார். அதேபோன்று அணியின் கேப்டனாகவும் நீடிப்பார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு கோப்பைகளை ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் வழங்கினார்.







