ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ.வாக நீடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு வருவதால் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாநில அரசியலில் குழப்பங்கள் ஏற்பட தொடங்கின. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, முதலமைச்சராக உள்ள ஹேமந்த் சோரனுக்கும் சுரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. அரசு பொறுப்பில் இருக்கும் ஒருவருக்குச் சுரங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று பாஜக புகார் அளித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரன் சட்டசபை உறுப்பினர் பதவியை நீக்க ஜார்க்கண்ட் ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது.
பின்னர், ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் உருவானது. இதனால் அவரது முதலமைச்சர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டது. ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ.வாக தகுதி நீக்கம் செய்யப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், அப்படி எதாவது நடந்தால், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறாமல் இருக்க அவர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்தச் சூழலில் நாளை (செப்டம்பர் 5-ம் தேதி) அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை செயலகத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விருப்பம் கூறப்பட்டு உள்ளது. அதேபோல பாஜகவும் தனியாகத் தனது எம்.எல்.ஏ.க்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. நம்பிக்கை வாக்கெடுப்பினும் போது, ஆளும் தரப்பிற்கு அழுத்தம் கொடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
– இரா.நம்பிராஜன்