பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, நியூஸ் 7 தமிழ், தமிழ்நாடு முழுவதும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை, விருதுநகர், புதுக்கோட்டை, மன்னார்குடியில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 முன்னெடுத்துள்ள நிகரென கொள் 2023 விழிப்புணர்வு இயக்கத்துக்கு மாணவர்கள், பேராசிரியர்கள் மட்டுமன்றி, பல்வேறு தலைவர்களும், பொதுமக்களும் பங்கேற்று கையெழுத்திட்டு ஆதரவு அளித்துவருகின்றனர். அந்த வகையில், சென்னை, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்று, பாலின சமத்துவ உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தார்.
விருதுநகர் பென்டகன் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்று பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். நியூஸ் 7 தமிழின் இந்த பாலின சமத்துவ விழிப்புணர்வு இயக்க முன்னெடுப்புக்கு பென்டகன் கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஜவஹர் பாராட்டு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பெருமாநாடு பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பாலின சமத்துவ உறுதிமொழி இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு அளிக்க வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்திலும் கையெழுத்திட்டனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், லாரி உரிமையாளர்கள் சங்கம் அலுவலகத்தில் பாலின சமத்துவ உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லாரி ஓட்டுநர்கள் ஆயிரம்பேர், பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். இதில், வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், தொழிலதிபர் ஹாஜா மொய்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆத்தூர் அருகே உள்ள கெங்வல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாலின சமத்துவ உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு அளிக்க வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்திலும் கையெழுத்திட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா











