நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் – நீதிபதி அதிரடி உத்தரவு

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இவர் சமூகவலைத்தளங்களில் இன்ஸ்டாகிராம், டிக்…

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இவர் சமூகவலைத்தளங்களில் இன்ஸ்டாகிராம், டிக் டாக், ரீல்ஸ்கள் செய்து பிரபலமான காரணத்தினால் , நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், யாஷிகா ஆனந்த், அவரது தோழி வள்ளி செட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32) ஆகியோர் சென்னையிலிருந்து புதுச்சேரி சென்றனர். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 12 மணி அளவில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்தார்.

மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் அலறி துடித்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், யாஷிகா ஆனந்திற்கு முதுகுத் தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகித் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.’

படங்களில் நடித்துக் கொண்டும் மற்றும் சமூக வலைத்தளம் மூலமாகத் தனது ரசிகர்கள் வட்டாரத்தில் ஆக்டிவாக இருந்து வந்தாலும், மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக மார்ச் மாதம் 21ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகாததைத் தொடர்ந்து, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகவில்லை என்றால் காவல்துறையினர் கைது செய்வதற்கும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.