அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உருவாக்கும் என்று வேளாண் & உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முதலமைச்சர் இளைஞரை போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளதாக தெரிவித்தார். கொளத்தூர் தொகுதி மக்களை முதல்வர் தாங்கி வருவதாகவும், உழைப்பின் சிகரமாக முதலமைச்சர் இருப்பதாகவும் பாராட்டினார். எம்.எல்.ஏ.வாக, முதலமைச்சராக, கட்சித் தலைவராக எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரண மு.க.ஸ்டாலின் என்று அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், இப்போது 10 மாத குழந்தையாக உள்ள திமுக அரசு, 10 ஆண்டுகாலத்துக்குப் பின் வளரும் போது விவசாயிகள் எங்குமே கடன் கேட்டு நிற்க மாட்டார்கள் என்றும், அதற்கான சூழல் இருக்காது என்று பேசினார். உழவர் நல வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.3,000 நிதி வழங்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், வாழை, மஞ்சள் பயிர்களை பாதுகாக்கும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாகவும், அவர்களுக்கு வாழ்வளிக்கும் பட்ஜெட்டாகவும் என்று அவர் பேசினார்.
கரும்பு, நெல், வாழை, கீரை பயிரிடும் விவசாயிகள் அனைவருக்கும் தேவையான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பதாகவும், தனியார் சர்க்கரை ஆலைக்கான நிலுவைத்தொகை அனைத்தும் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் பேசினார். எதிர் தரப்பினரின் கருத்து சிறந்ததாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசுதான் திமுக அரசு என்று கூறிய அமைச்சர், அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.